Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இனியும் நான் அமைதியாக இருக்க போவதில்லை - சசிகலா

ஜுன் 28, 2021 10:59

சென்னை: ‘‘அ.தி.மு.க.வை வளர்க்க நான் எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கிறேன். இனியும் நான் அமைதியாக இருக்க போவதில்லை’’ என்று சசிகலா கூறியுள்ளார். சசிகலா தினந்தோறும் கட்சி தொண்டர்களிடையே தொலைபேசியில் பேசி பரபரப்பு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அந்தவகையில் தர்மபுரியை சேர்ந்த பாலு, புதுச்சேரியை சேர்ந்த லாவண்யா, கோவையை சேர்ந்த அமுல் சரவணன், எடப்பாடியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி, வடிவேல் ஆகியோரிடம் சசிகலா நேற்று தொலைபேசியில் உரையாடினார்.

அப்போது அவர் தெரிவித்த கருத்துகளின் விவரம் வருமாறு:-

அ.தி.மு.க.வை நல்லபடியா சரிபண்ணி நல்ல நிலைமைக்கு கொண்டு போயிடலாம். நான் பெங்களூருவுக்கு செல்லும்போதே ஒற்றுமையா இருக்க சொன்னேன். அதை அவங்க கேட்கல. அதனால ஆட்சியை இப்போ இழந்துட்டு நிக்கிறாங்க... இப்போ தொண்டர்கள் என்கூட பேசும்போது மனவருத்தத்தை என்னிடம் சொல்றாங்க.

இந்த கட்சியை வளர்க்க நான் எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கேன். அதனால் என் கண் முன்னால நடப்பதை பார்த்து இனிமேல் அமைதியாக இருக்கமுடியாது. எனவே தொண்டர்களுடன் சேர்ந்து இந்த கட்சியையும், ஆட்சியையும் நல்லபடியா வழிநடத்தணும். அதுதான் எனது ஆசை. நிச்சயம் அதை செய்வேன். மிக விரைவில் எல்லாத்தையும் சரிபண்ணிடுவேன்.

கொங்கு மண்டல மக்கள் எல்லாருமே தலைவர் (எம்.ஜி.ஆர்.) மேலும், அம்மா (ஜெயலலிதா) மேலும் ரொம்ப பாசமா இருப்பாங்க... அந்த மக்கள் அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டு பழக்கப்பட்டவங்க... அந்த மக்கள் நம்ம மேல வச்ச பிரியம் எனக்கு பெரிசா பட்டுச்சு... அதனால்தான் கொங்குமண்டல மக்களுக்கு ஒரு நல்ல அங்கீகாரத்தை தரலாம்னு நினைச்சுதான் அந்த வாய்ப்பை கொடுத்துட்டு போனேன். இப்போ இவங்க பண்றத பார்த்தா ரொம்ப கஷ்டமா இருக்கு... என்ன ஆனாலும் சரி இந்த கட்சியை இனிமேலும் விட்டுவிட மாட்டேன். தலைவர், அம்மா காலத்து அ.தி.மு.க.வை மீண்டும் கொண்டுவருவேன்.

முதலில் கட்சியை சரிபண்ணி நல்லபடியாக கொண்டுபோவோம். அடுத்து அம்மா ஆட்சியையும் அமைப்போம். தொண்டர்களின் விருப்பத்தின்படி இனிமேல் செயல்படுவேன். இவங்க கட்சியை அழிக்க நான் விட்டுட மாட்டேன். கொரோனா முடியட்டும் தொண்டர்களை வந்து சந்திப்பேன். நீங்க எல்லாரும் என்கூட தான் இருக்கீங்க... என்னை நம்புங்க... யாரையும் நான் கைவிடமாட்டேன். தலைவர் ஆரம்பிச்சு, அம்மா வழிநடத்துன இந்த கட்சி இனியும் கீழே போக நான் விடவே மாட்டேன்.

இவ்வாறு சசிகலா பேசினார்.

தடுப்பூசி குறித்து வலியுறுத்தல்

சசிகலா தொண்டர்களுடன் பேசும்போதெல்லாம் ‘கொரோனா காலம் ஜாக்கிரதையா இருங்க... முக கவசம் கட்டாயம் அணியுங்கள். தடுப்பூசி போட்டுக்கோங்க...’ என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
 

தலைப்புச்செய்திகள்